மே7ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு பிறகு இயக்கப்படும் பேருந்துகளில் 25 பேர் மட்டுமே அமர அனுமதி வழங்கப்படும் என்றும், அனைவரும் முக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே வேளையுல் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலங்களில் பஸ் இயக்கப்படாது என தெரிகிறது.

மே 17ஆம் தேதிக்கு பிறகு 50 சதவிகிதம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக  கூறப்படுகிறது.  இதையடுத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முழுமையாக சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு மாஸ்க் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்குக்கு பின், தமிழகத்தில், பஸ்களை இயக்க தயாராக இருக்கும்படி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். பஸ்களை இயக்குவது குறித்தும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன், போக்குவரத்து துறை செயலர், தர்மேந்திர பிரதாப் யாதவ், இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இதற்கிடையில்,  இயக்கப்படும் பஸ்களில் கடைப்பிடிக்க வேண்டிய, 25 வழிமுறைகள் குறித்து, அவர் ஏற்கனவே, கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சில வெளியாகி உள்ளன. அதன்படி,
ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மாஸ்க்,  சனிடைசர், கையுறை உள்ளிட்டவற்றை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மாஸ்க் இல்லாத பயணிகளை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது
நோய்த் தொற்றை தடுக்கும் வகையில், பயணியர், ஓட்டுனர், நடத்துனர் என, அனைவரும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு பஸ்சில், 25 பேரை மட்டுமே ஏற்றுவது என்றும், அதில், 20 பேர், இருக்கையில் அமரவும், 5 பேர், நின்றபடி பயணிக்கவும் அனுமதிக்கலாம்
வரும் 18ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை  அமலுக்கு வரும் என  தெரிகிறது.
தினமும் டிப்போவில் இருந்து, பஸ் புறப்படும் போதும், இரவில் டிப்போவுக்கு திரும்பும் போதும், கிருமி நாசினி தெளிக்கப்படும்.
பஸ்களிலும், பஸ் நிலையங்களிலும், பயணியர் இடைவெளி விட்டு நிற்பதற்காக, வண்ணக் கோடுகள் வரைய உத்தரவிடப்பட்டு உள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்த, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஓட்டுனர், நடத்துனர்களுக்கு, காய்ச்சல், சளி பரிசோதனைகள் செய்து, கிருமி நாசினி திரவத்தால், கைகளை சுத்தம் செய்து, கையுறை அணிந்த பின் தான், பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
‘ஏசி’ தவிர்த்து, ஜன்னல்களை திறந்து வைத்து, பஸ்கள் இயக்கப்படும்.
பயணியரிடம், தினசரி மற்றும் மாதாந்திர கட்டண அட்டைகளையும், ‘ஆன்-லைன்’ வழியான டிக்கெட் கட்டணத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதலில் 50 சதவிகித பேருந்துகளும், பின்னர் படிப்படியாக பயணியரின் எண்ணிக்கையையும், மாவட்டங்களையும் அதிகரிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, சிவப்பு மண்டலங்களில், மத்திய அரசின் வழிகாட்டுதல் பெற்ற பின்னரே, பொது போக்குவரத்தை துவங்கலாம் என, முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது குறித்தும், ஊரடங்குக்குப் பின், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த பகுதிகளில், எத்தனை பஸ்களை இயக்குவது என்பது குறித்தும், இன்றைய ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.