திருவனந்தபுரம்:

கேரளாவில் வரும் 8ம் தேதி முதல் நிபந்தனைகளுடன் வழிபாட்டு தலங்கள், ஒட்டல்கள், மால்கள் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 9ந்தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் வழிப்பாட்டுத்தலங்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, சுவாமி சிலைகளை தொடக் கூடாது; பிரார்த்தனை பாடல்கள் பாடக் கூடாது; பிரசாதம் கிடையாது’ என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் ஜூன் 9-ம் தேதி திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகைளை அமல்படுத்துவது குறித்தும், கோயில்களில் எத்தனை பக்தர்களை அனுமதிப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கோயிலுக்குள் வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஒரே நேரத்தில் 50 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு நேரடியாக பிரசாதம் வழங்கக் கூடாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.