டில்லி

ரிசர்வ் வங்கி விதியை மீறி பாஜக அரசு தேர்தல் பத்திரங்களை வெளியிட்டுக் கறுப்புப் பணத்தைக் கட்சிக்குள் கொண்டு வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பாஜக அரசு அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை எளிமைப்படுத்துவதாக ‘தேர்தல் நிதிப் பத்திரம்’ எனும் திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டத்தின்படி அரசியல் கட்சிகளுக்கு 2,000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாகக் கொடுக்கமுடியும் எனவும் அதற்கு மேலான தொகையைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கியவர் குறித்த தகவல்கள் வங்கியிடம் இருந்தாலும், அந்த நன்கொடையை வழங்கியவர் யார் என்று அரசியல் கட்சிக்குத் தெரியாது. அத்துடன், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கு பெற முடியும்.

தேர்தல் பத்திர விதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சிகள் ஆகியவை ஆட்சேபனை தெரிவித்தன.  இவ்வாறு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய விதிகளை அறிவித்த பா.ஜ.க அரசு  அவற்றை மீறும் வகையில் புதிய உத்தரவைப் பிறப்பித்து முறைகேட்டுக்கு வழிவகுத்தாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த இந்த தேர்தல் பத்திரத் திட்டம், தேர்தல்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்வாக்கை சட்டப்பூர்வமாக்கியது  அத்துடன் . ரகசியமாக கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வழிவகை செய்ததன் மூலம் வெளிநாட்டுப் பணம் அரசியல் கட்சிகளிடையே புழங்க வழிவகுத்தது..

கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் முதன்முதலில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை மற்றும் நன்கொடை அளித்ததில் பெறப்பட்ட தொகையான 222 கோடி ரூபாயில், 95 சதவிகிதத்தை பா.ஜ.க பெற்றுள்ளது தெரிய வந்தது.   அத்துடன், கர்நாடகா, சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர், சட்டவிரோதமாகத் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்க அரசின் விதிகளை மீறுமாறு பிரதமர் அலுவலகம் நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜிவ் கவுடா இது குறித்து, “பெயரளவுக்கு தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கு ஒருநாள் முன்பு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டது. ஏற்கனவே  ரிசர்வ் வங்கி அளித்துள்ள பரிந்துரைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பாஜக அரசு கருப்புப் பணத்தைக் கட்சிக்குள் கொண்டு வரவே தேர்தல் பத்திரங்களை பா.ஜ.க அரசு வெளியிட்டதால் அவற்றை ரத்து செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.