டில்லி:

ங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அலுவலர்கள் சங்கம் செப்டம்பர் 25ந்தேதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 27ந்தேதி நள்ளிரவு வரை வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன. இதன் காரணமாக  வரும் 26 மற்றும் 27ந்தேதி வங்கிப்பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பொதுத்துறை வங்கிகள் பலவற்றை இணைக்கும் முடிவை மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.  ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல வங்கிகளை, வங்கி ஊழியர்களின் எதிர்பையும் மீறி  பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்தது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30ந்தேதி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின்போது மேலும் பல வங்கிகள் இணைப்பு தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைட்டட் வங்கி ஆகியவை இணைக்கப்படும் என்றும், 17.95 லட்சம் கோடி ரூபாயோடு இவை இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்படும் என்றும்,  கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டு, 15.20 லட்சம் கோடி ரூபாயுடன் அது நாட்டின் நான்காவது பொதுத்துறை வங்கியாக செய்யப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.

”யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகியவை இணைக்கப்படும். இவை இந்தியாவின் ஐந்தாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

“இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டு 8.08 லட்சம் கோடி ரூபாயுடன் இவை ஏழாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்” என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.

மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

பேங்க் ஆஃப் பரோடா, விஐயா பேங்க் மற்றும் தேனா பேங்க் ஆகிய வங்கிகளின் லாபம் அவற்றின் இணைப்புக்கு பிறகு 710 கோடியாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இதுவரை 27 பொதுத்துறை வங்கிகள் இருந்துவந்த நிலை மாறி இனி 12 பொதுத்துறை வங்கிகள் செயல்படும்’ என்றும்  குறிப்பிட்டிருந்தார்.

மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்கு வங்கி ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வங்கிகள் இணைப்பை கண்டித்து AIBOC, AIBOA, INBOC, NOBO ஆகிய வங்கி அலுவலர் சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளன

செப்டம்பர் 25ம் தேதி நள்ளிரவு முதல் 27ம் தேதி வரை வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளன.

இதன் காரணமாக அந்த 2 நாட்கள் வங்கிகள் சேவை முழுவதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், ஏடிஎம், டிஜிட்டல் பண பரிவர்த்தனை போன்றவையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.