சென்னை:

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலவலகம் மற்றும் அதன் தலைவர்  கருணாநிதி வீட்டில் இன்று கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில்  ராணுவ தளவாட கண்காட்சி நேற்றிலிருந்து நடக்கிறது. ஆனால் இதை  முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிட பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.

டில்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்பட்ட அவர்,  காலை 9.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் செல்கிறார்.  அதன்பின் அங்கிருந்து காரில் கண்காட்சி நடைபெறும் திருவிடந்தைக்கு செல்கிறார்.

இதற்கிடையே உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராடங்கள் தமிழகத்தில் நடந்துவருகின்றன. போராட்டக்காரர்கள்,  பிரதமரின் தமிழக வருகைக்கும் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் திமுக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் ஈடுபட உள்ளன.

இன்று  12-ம் தேதியன்று எல்லோருடைய வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கருப்பு உடையணிய வேண்டும் என்றும், கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக தி.மு.க.வின் தலைமையகம் அமைந்திருக்கும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அக்கட்சித் தலைவர் கருணாநிதி வீடு ஆகிய இடங்களில் இன்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது.