பாரதிராஜா

 

 

ல்ல தலைவர்களை, அமைச்சர்களை உருவாக்குபவராக  ரஜினி இருக்கலாம். ஆனால் அவர் தலைமை பொறுப்புக்கு ஆசைப்படக்கூடாது என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீண்டும் தெரிவித்துள்ளார்.

“நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், முதல்வர் பொறுப்புக்கு வரக்கூடாது” என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பேசி வருகின்றனர்.

 

இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் 7 தமிழர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில், சிறை கைதி ரவிச்சந்திரன் எழுதிய, ‘ராஜி்வ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி தலைமை வகித்தார். வழக்கறிஞர் தி.திருமுருகன் வரவேற்றார்.

புத்தகத்தை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசினார். அப்போது அவர், “தமிழகம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில்   உள்ளது. இங்கே ஒற்றுமை இல்லாததால் பிரிவினை சக்திகள் பின்வாசல் வழியாக நுழைய முயற்சிக்கின்றன. தமிழர்கள் அனைவரும் தமிழர்கள் என்ற முறையில் ஒன்றுபட்டால் எந்த சக்தியாலும் தமிழகத்தை எதுவும் செய்ய முடியாது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவரையும் விடுதலை செய்ய சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். அவரது வழியில் பயணிப்பதாக கூறும் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இந்த எழுவரையும் விடுதலை செய்யட்டும்.  நான் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க தயார்.

இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பியூஸ்

போன பல்புகள். மத்திய அரசு என்ற பல்பின் வெளிச்சத்தின் கீழ் இருப்பதால் இரண்டு பல்புகளும் எரிவது போல் தெரிகிறது.

இப்போது தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்பப்போவதாக பலரும் கூறி வருகின்றனர். இப்போது வெற்றிடம் இல்லை” என்று பேசினார்.

மேலும், “ரஜினி, கமல் நல்லவர்கள். இவர்கள் கட்சி தொடங்குவதற்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது 25 வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் இறந்த போது வெற்றிடம் ஏற்பட்டது. வேதம்புதிது படம் வெளியான நேரம்.  அப்போது ரஜினி, கமலை நான் அரசியலுக்கு வரச் சொன்னேன். மறுத்துவிட்டனர்.

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் தொழில் செய்யலாம், அரசியல் செய்யலாம். ஆனால், தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் மட்டுமே இருக்க வேண்டும். நல்ல தலைவர்களை உருவாக்குபவர்களாகவும், அமைச்சர்களை  உருவாக்குபவர்களாகவும் இருக்கலாம். தலைமை பொறுப்புக்கு வர ஆசைப்படக்கூடாது.

கர்நாடாவுக்கு எதிராக எதையாவது பேச முடியுமா? தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் பெயரை தமிழ் திரையுல நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை என மாற்ற முடியுமா? எவ்வளவு கேவலம் தெரியுமா? காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழ் திரையுலகத்தினர் நடத்திய நெய்வேலி போராட்டத்துக்கு ரஜினி வரவில்லை. கமல் ஊர்வலத்துக்கு வந்தார். ரஜினி எனது நண்பர் தான். நட்பு ரீதியில் ரஜினி அற்புதமான மனிதர். ஆனால் நட்பு என்பது வேறு. கொள்கை என்பது வேறு. நெய்வேலி போராட்டத்துக்கு நடிகர்கள் செல்லக்கூடாது என்றார் அவர். நாங்கள் நெய்வேலியில் போராடிக் கொண்டிருந்த போது அவர் மட்டும் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். நெய்வேலி போராட்டத்துக்கு வராமல் சென்னையில் தனியே உண்ணாவிரதம் இருந்த உங்களை (ரஜினி) நம்பி எப்படி தமிழ்நாட்டை ஒப்படைக்க முடியும்? காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று சொல்லுங்கள், இல்லை காவிரி நீரில் தமிழகத்துக்கு பங்கு

உண்டு என ஒற்றை வார்த்தை சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழகத்துக்காக எதையும் செய்யாத போது அப்படி என்ன தமிழகத்தை காப்பாற்ற போகிறீர்கள். தமிழர்களை பகடைக்காய்களாக வைத்து அழிக்க சதி நடைபெறுகிறது. ஒற்றுமையாக இருந்து இதை முறியடிக்க வேண்டும்.

ரஜனி, கமலுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா? தமிழகத்தின் நிலப்பரப்பே அவர்களுக்கு சரியாக தெரியாது. தமிழகத்தில் எவ்வளவு நதி, அணைகள் உள்ளது என்று தெரியாது. தமிழத்தின் வரலாறு தெரியாது. கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து கெட்டு குட்டிச்சுவராகி போனோம். குஷ்புக்கு கோயில் கட்டுகிறார்கள் முட்டாள்கள். எனவே விழித்தெழு, விழித்தெழப்பார். ஒற்றுமையாக இருந்து சதிகளை முறியடிப்போம்” என்று பாரதிராஜா பேசினார்.

இயக்குநர் அமீர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலர் வன்னி அரசு, விசிக மாவட்டச் செயலர் எல்லாளன், நாம் தமிழர் கட்சி மண்டலச் செயலர் வெற்றிகுமரன். நூலின் தொகுப்பாசிரியர் பா.ஏகலைவன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டு பேசினர்.