தூத்துக்குடி:

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசாமல் அவசரமாக சென்னை திரும்பிவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுமார் ஒன்றரை மணி நேரம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.  இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர் பத்து நிமிடம் அங்கிருந்தார்.

அங்கு ஒரு ஆய்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் பத்து நிமிடங்களிலேயே ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விமானத்தில் சென்னை கிளம்பினார் பன்னீர்செல்வம்.

 

 

காவல்துறையினரின்  தடியடி, துப்பாக்கி சூட்டால் தூத்துக்குடியின், திரேஸ்புரம், அண்ணாநகர், பிரையன்ட் நகர் பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.  சிறுவர்கள் உடல்களில் கூட காவலர்களின் லத்தி தழும்பு உள்ளது. ஆனால், பன்னீர்செல்வம் அங்கு சென்று காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்ட வீடுகளை பார்வையிடவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசவும் இல்லை.

மர்மமாக எரிந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பைக்கூட அவர் பார்வையிடவில்லை

இதையடுத்து, “கடமைக்கு பார்வையிட்டு சென்னை கிளம்பினார் பன்னீர்செல்வம்” என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது கூட மிகவும் சோர்வாகவும், விரக்தியுடனும் காணப்பட்டார்.