சென்னை,

ஜெ.மறைவை தொடர்ந்து இரண்டாக பிளவுபட்ட அதிமுக, தற்போது 3 அணிகளாக பிளவு பட்டு செயல்படுகிறது.

ஓபிஎஸ் அணியில் இருந்து வந்தவர் ஆறுகுட்டி எம்எல்ஏ.. இவர் தற்போது ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிவிட்டதாக கூறி உள்ளார். இந்நிலையில் விரைவில்  ஓபிஎஸ் அணி காலியாகும் என கூறப்படுகிறது.

ஆறுகுட்டி எம்எல்ஏ ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணியில் இணைந்துவிட்டதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில், தாம் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிவிட்டதாகவும், எந்த அணியில் சேர்வது என்பது குறித்து விரைவில் தெரிவிக்க  இருப்பதாகவும் கூறி உள்ளார்.

அதிமுக உடைந்தபோது, கூவத்தூர் அழைத்துச்செல்லப்பட்ட எம்எல்ஏக்களில் ஆறுகுட்டியும் ஒருவர். எடப்பாடியை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து விலகி, ஓபிஎஸ் அணிக்கு தாவினார்.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கு குறித்த விசாரணையிலும் இவர் பெயர் அடிபட்டது, அதுகுறித்த விசாரணைக்கும் அழைக்கப்பட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த ஆறுக்குட்டி எம்எல்ஏ. எடப்பாடி அணிக்கு தாவிவிட்டதாக தகவல்கள் பதவியது.

இந்நலையில் இதுகுறித்து ஆறுகுட்டி எம்எல்ஏ கூறியதாவது,

ஓபிஎஸ் தரப்பினர்  பல்வேறு நிகழ்ச்சிகளில் என்னை அழைக்காததால் அவர்கள்மீது எனக்கு அதிருப்தி இருந்தது.  ஓபிஎஸ் மீதும் வருத்தம் இருந்தது. அதனால் அவர்கள் அணியில் இருந்து விலகிவிட்டேன்.

நான்  யாரை நம்பியும் அரசியலுக்கு வரவில்லை. தொகுதி மக்களை நம்பி மட்டுமே அரசியலுக்கு வந்தேன் என்னை நம்பி ஓட்டுப்போட்ட மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும். அதை செய்யாமல் நான் சும்மா இருக்க முடியாது. ஆகவே தொகுதி மக்களின் ஆலோசனை பெற்று எந்த அணியில் சேர்வது என்பது முடிவு செய்வேன் என்றும்,

மேலும் மாற்று அணிக்கு  நான் மட்டும் தனியாக போவேனா, எல்லாரும் சேர்ந்து போவார்களா என்பது எனக்கு தெரியாது என்றும்,

டிடிவி தினகரன் அவர் பாட்டுக்கு இருக்கிறார். சசிகலா சிறையில் இருக்கிறார் அவரைப்பற்றி எதுவும் பேச முடியாது. ஏற்கனவே  சசிகலா முதல்வராக வேண்டும் என்று நான் பேட்டியே கொடுத்திருக்கிறேன் என்றார்.

தற்போது, நான்  ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிவிட்டேன். வேறு எந்த அணியில் சேர்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறினார்.

ஓபிஎஸ் அணியில் உள்ள 12 பேர்களுக்கிடையே அடிக்கடி முட்டல், மோதல் ஏற்படுவதாகவும், ஒருசிலர் எடப்பாடி அணிக்கு ஆதரவாக பேசி வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலயில் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி வருபவர்களுக்கு அமைச்சர் பதவி என்று ஆசை காட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் முதல் விக்கெட் விழுந்துள்ளது. தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த விக்கெட்டுகளும் விழ தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஓபிஎஸ் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.