அகமதாபாத்: வாக்குச்சாவடிகளில் பிரதமர் மோடி கேமரா வைத்திருக்கிறார் என்றும், அதன்மூலமாக தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்காதவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எதிர்காலத்தில் பணி வாய்ப்புகள் கிடைக்காது என்றும் மிரட்டியுள்ளார் குஜராத்தின் ஒரு பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்.

ரமேஷ் கதாரா என்ற அந்த சட்டமன்ற உறுப்பினர் கூறியிருப்பதாவது, “வாக்குச்சாவடிகளில் நரேந்திர மோடி, கேமராக்களைப் பொறுத்தியுள்ளார். அதன்மூலம், பாரதீய ஜனதாவுக்கு வாக்களிக்காத காங்கிரஸ் ஆதரவாளர்கள் யார் என்று கண்டறியப்படுவார்கள்.

மேலும், குறைந்த வாக்குகள் பதிவானாலும், யாரெல்லாம் வாக்களிக்கவில்லை என்பது கண்டறியப்படும். எனவே, சம்பந்தப்பட்டவர்களுக்கு அதன்பிறகு பணி வாய்ப்புகள் கிடைக்காது” என்றுள்ளார்.

இதுபோன்ற பேச்சுகளால், பாரதீய ஜனதாவைச் சேர்ந்த மேனகா காந்தி மற்றும் யோகி ஆதித்யநாத் போன்றோருக்கு சில நாட்கள் தடைவிதிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். ஆனால், இவையெல்லாம் அக்கட்சியின் இதர உறுப்பினர்களை அசைத்துப் பார்க்கவில்லை போலும்!

– மதுரை மாயாண்டி