சென்னை

திமுகவுடன் அமைத்துள்ள கூட்டணியால் 40 இடங்களிலும் இந்த கூட்டணி வெல்லும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

நேற்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 9 தமிழக மக்களவை  தொகுதிகளும் பாண்டிச்சேரி மக்கள் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.   இது தமக்கு முழு திருப்தி அளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் வேணுகோபால் நேற்று தெரிவித்திருந்தார்.   இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அழகிரி, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களது வாக்குகளை நயவஞ்சகமாக கவருகிற வகையில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லப்போவதாக கவர்ச்சிகரமான வாக்குறுதி வழங்கி மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்க காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் 24-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன.

சென்ற வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை ஆதாரத்துடன் வழங்கியவர் பா.ம.க. இளைஞரணி தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ்.

அந்த ஊழல் பட்டியலில் முதலாவது குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் ஆற்றுமணல் விற்பனையில் ரூபாய் 7.10 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. பல்கலைக் கழக துணை வேந்தர்கள், ஆசிரியர்கள் நியமனத்தில் ரூபாய் 320 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி 24 ஊழல் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது.

இந்த பட்டியலை வழங்கி 70 நாட்களுக்குள்ளாக எந்த அ.தி.மு.க. மீது ஆளுநரிடம் ஊழல் பட்டியல் வழங்கப்பட்டதோ, அந்த ஊழல் கட்சியோடு கைகோர்த்து இன்றைக்கு பா.ம.க. நிறுவனர் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பட்டிருக்கிறார். கரைபடிந்த கரங்கள் இணைந்துள்ளன. இதைவிட அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா ? சந்தர்ப்பவாத அரசியலில் இன்றைக்கு மருத்துவர் ராமதாஸ் கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்

நடைபெற உள்ள 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க.வுக்கு முழுத் தோல்வியை வழங்கி உரிய பாடத்தை தமிழக மக்கள் வழங்குவார்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் தேவையில்லை. கடந்த 2004 தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்கிற வெற்றியின் இலக்கை நோக்கி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடங்கி விட்டது.” என குறிப்பிட்டுள்ளார்.