ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ‘’ ஆச்சார்யா ஹரிகர் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்’ உள்ளது.
ஏராளமான புற்று நோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், இங்குள்ள புற்று நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனை ஊழியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது.
நோயாளிகள்,ஊழியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
கொரோனா பாதித்த நோயாளிகள் சிலர், புவனேஸ்வரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மருத்துவமனைக்கு பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
மருத்துவமனை பணியாளர்களின் கவனக்குறைவால், இத்தனை பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கட்டாக் மாவட்ட ஆட்சித்தலைவர் பபானி சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
‘’ விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அவர் தெரிவித்தார்.
புற்று நோய் மருத்துவமனையில் நூறு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது, ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
=பா.பாரதி.