சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் போதைக்கு அடிமையான 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளதாக, போதைத் தடுப்பு சிறப்பு அதிரப்படை இயக்குனர் ஜெனரல் முகமது முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

போதைக்கு அடிமையான 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஆண்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 25 ஆயிரம் பேர் ஹெராயின் போதை வஸ்துக்கு அடிமையானர்வகள்.

போதைத் தடுப்புக்கான சிறப்பு அதிரப்படை கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. போதைப் பழக்கத்தை தடுக்கவும், அதிலிருந்து மீட்கவும் 3 வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.

போதையை பயன்படுத்துவோருக்கு எதிரான ‘விரிவான நடவடிக்கை’ என அதற்கு பெயரிடப்பட்டது.

போதை வஸ்துகள் விற்பனையை தடுப்பதும், போதையில் விழுவதை தடுப்பதும், மீட்பதும் இந்த சிறப்பு அதிரடிப் படையில் முக்கிப் பணி.

முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தலைமையிலான போதை தடுப்பு அமைச்சரவை துணைக்குழுவின் கண்காணிப்பின்படி, சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை மேற்கொண்டது.

இதுவரை போதைப் பழக்கத்திலிருந்து 168 பேர் மீண்டுள்ளனர். இதேபோன்று, சுகாதாரத்துறையும் போதைத் தடுப்பு கண்காணிப்புப் பிரிவை தொடங்கி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கற்பித்தல் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் ஏறத்தாழ 5 லட்சம் போதைத் தடுப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 1,500 ஒருங்கிணைப்பாளர்கள், 15 ஆயிரம் போதைத் தடுப்புக் குழுவினர் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 523 ஆசிரியர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.

ஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்களை தினமும் கையாளும்  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்களுக்கும் போதைத் தடுப்புக்கான சிறப்பு ஆசிரியர்கள் 523 பேர் பயிற்சி கொடுத்துள்ளனர். ஏற்கெனவே 27 லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியை முடித்துவிட்டனர் என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், தேசிய அளவிலான போதைத் தடுப்பு கொள்கையே, இளம் தலைமுறையினரை பாதுகாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போதை தடுப்பு நடவடிக்கையை பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், டில்லி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச அரசுகள் இணைந்து செயல்படுத்த கைகோர்த்துள்ளன.