மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் காலியாக உள்ள 4400 அரசு பணிகளுக்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசின் 4 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் வேலையில்லாத திண்டாட்டத்தின் அவலத்தை தோலுரித்து காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ்  இருந்து வருகிறார். சமீபத்தில் அரசு பணியில் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை அரசு வேலைகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சுமார் 4400 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் வகையில் தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து  விண்ணப்பம்  கோரி விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து, விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.

இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து மலைபோல் குவிந்துள்ளதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் 1218 வன காவலர் வேலைக்கு 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த வேலைக்கு 12ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும் என்ற நிலையில் முதுகலை பட்டம், என்ஜினியரிங்க படித்த ஏராளமானோரும் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வு முடிவின் வாயிலாக கடந்த 4 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது,  இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் வாய்ச்சவடால் விட்ட மோடி இன்றுவரை வேலைவாய்ப்பு வழங்கியிருப்பதாக ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

ஆனால், அவரது ஆட்சியில்,  2013 முதல் 2015-ம் ஆண்டு வரையில்,  நாட்டின் வேலைவாய்ப்பு அளவு மிகவும் குறைந்து விட்டதாகவும், 70 லட்சத்துக்கும் குறைவாகவே இருப்பதாகவும், பிரபல  கல்வி நிறுவனமான அசிஷ் பிரேம்ஜி கல்வி நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் சுட்டி காட்டியிருந்தது.

சமீபத்தில் சென்னை சட்டமன்ற செயலகத்தில் ஒருசில துப்புரவு பணியாளர் வேலைக்கு, இதுபோல ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.