ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இருந்தும், ஐபிஎல் லீக் போட்டிகளின் முடிவில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ராஜஸ்தான் அணி.

இந்த நிலை, அந்த அணியின் மீது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. மேலும், அந்த அணியிலிருந்த இந்திய வீரர்களின் செயல்பாடுகளும் ஏமாற்றமளித்தன.

ராஜஸ்தான் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக அந்த அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

“முதல் இரண்டு போட்டிகளை நாங்கள் நன்றாக துவக்கினோம். ஆனால், இடையில் நடைபெற்ற போட்டிகளில் நாங்கள் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். பொறுப்புடன் விளையாடவில்லை” என்றுள்ளார் ஸ்மித்.

“சூழல்களை குறை சொல்வதற்கு எதுவுமில்லை. நாங்கள் ஒரு ஸ்திரத்தன்மையுள்ள கிரிக்கெட்டை ஆடவில்லை. சில போட்டிகளில் எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தும் கோட்டைவிட்டோம்” என்றுள்ளார் பயிற்சியாளர் மெக்டொனால்ட்.

பென்ஸ்டோக்ஸ் தாமதமாக ஃபார்முக்கு வந்தது. ஸ்மித் தொடர்ந்து சொதப்பியது, வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சருக்கு சரியான ஒத்துழைப்பு இல்லாமல் போனது, சஞ்சு சாம்சன் பல போட்டிகளில் ஏமாற்றியது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ராஜஸ்தான் அணி கடைசி இடத்தில் தேங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.