ஐதராபாத்: தனது மதிப்பு காங்கிரஸ் கொடுக்கும் பணம் ரூ.2000ஐ விட அதிகம் என்பதால், பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு ஓட்டளியுங்கள் என்றுள்ளார் அசாதுதீன் ஓவைஸி.

தெலுங்கானாவில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. மொத்தம் 120 நகராட்சிகள் மற்றும் 10 மாநகராட்சிகளுக்கான தேர்தல்கள் இம்மாத இறுதியில் நடக்கவுள்ளன.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனையடுத்து மக்களவை உறுப்பினரும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைஸி மக்களுக்கு வேறுவிதமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சியிடம் அதிகளவில் பணம் உள்ளதால் அவர்கள் பணம் கொடுத்தால் அதை மறுக்காமல் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு உங்களின் வாக்கை எனக்கு அளியுங்கள்.

எனது மதிப்பு, அவர்கள் கொடுக்கும் பணம் ரூ.2000 என்பதைவிடவும் அதிகம் என்பதால், மக்களுக்கு கொடுக்கும் பணத்தின் மதிப்பை அவர்கள் உயர்த்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார் ஓவைஸி.