தராபாத்

தெலுங்கானா நகராட்சி தேர்தல்களில் முக அடையாள முறை பயன்படுத்த உள்ளதற்கு ஐமிம் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் நகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன.   இந்த தேர்தல்களில் முறைகேடுகள் மற்றும் ஆள்மாறாட்டங்களைத் தடுக்க தெலுங்கானா தேர்தல் ஆணையம் கொம்பள்ளி நகராட்சியில் 10 வாக்குச் சாவடிகளில் ஒரு புதிய முறையைப் பயன்படுத்த உள்ளது.  அதாவது வாக்காளர்களின் முகத்தைப் பதிந்து அத்துடன் வாக்காளர் அட்டையிலுள்ள புகைப்படத்துடன் ஒப்பிடும் முறையைப் பயன்படுத்தப் போவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நேற்று இதை எதிர்த்து ஐமிம் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் ஒன்ற அனுப்பி உள்ளார்.  அதில், “வாக்காளர்கள் எதற்காக வாக்களிக்கும் முன்பு தங்கள் முகத்தைப் படம் எடுத்துப் பதிய அனுமதிக்க வேண்டும்?   எந்த சட்டம் இந்த முறையைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது?   இந்த விவரங்கள் தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்க பாதுகாப்பு முறைகள் உள்ளதா?

ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்பது அரசியல் சட்டப்படி அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும்.    அதை யாராலும் மீற முடியாது.  இந்த முறையின் மூலம்  ஏமாற்றுதலைக் கண்டுபிடிக்க உள்ளதாகத் தேர்தல் ஆணையம் நினைத்தால்  தற்போதுள்ள முறைகள் என்னென்ன என்பதையும் அதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பதையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்குமா?

எனவே பொதுமக்களின் தனிப்பட்ட உரிமையை மீறும் இந்த முறை மிகவும் தவறானது.   தேர்தல் ஆணையம் இந்த முறையை உடனடியாக கை விட வேண்டும். ” எனத் தேர்தல் ஆணையத்தை அசாதுதீன் ஓவைசி கேட்டுக் கொண்டுள்ளார்.