டெல்லி:இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்துவதற்கான 2, 3ம் கட்ட பரிசோதனைகளுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த இங்கிலாந்தின்  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. அந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயர் கொண்ட தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மொத்தம் 3 கட்டங்களாக மனிதர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்படிருந்தது.

இதையடுத்து, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் கடந்த மாதம் தடுப்பூசி முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் வெகுவாக முன்னேற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி தரக்கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் இன்ஸ்டிடியுட் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை பரிசீலனை செய்ய மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு சிறப்பு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை மனிதர்களுக்கு அடுத்தகட்டமாக செலுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளுக்கு பின்னர் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை 2, 3ம் கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்குமாறு நிபுணர் குழு கடந்த 31ம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை வழங்கியது.

இந்நிலையில், சிறப்புக்குழு பரிந்துரையை தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இந்த இறுதி கட்ட பரிசோதனையில் சீரம் இன்ஸ்டிடியுட் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து நாடு முழுவதும் 1,600 பேருக்கு சோதனை முறையில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.