டில்லி

சாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்களின் நிலை குறித்து ப சிதம்பரம் டிவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்டை நாடுகளான வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து  சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பவர்களை அடையாளம் கண்டறிவதற்காக அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல்  தயாரிக்கப்பட்டது.

சென்ற ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான இந்தப் பட்டியலில் அசாம் மாநிலத்தில் வசிக்கும் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இதனால் அந்தப் பகுதியில் கடும் பதட்ட நிலை எற்ப்ட்டுள்ளது.   பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்காக மத்திய பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..

முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் தனது குடும்பத்தினர் மூலமாக வெளியிட்டுள்ள டிவிட்டரில், “மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடி வரும் இந்நேரத்தில் மறுக்கப்பட்டுள்ள குடிமை மற்றும் மனித உரிமைகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், “மத்திய அரசு ஒரு புறம் வங்கதேச அரசுக்குத் தேசிய குடியுரிமை பதிவேட்டால் பிரச்சனை வராது என உறுதி அளித்துள்ள நிலையில், அந்த 19 லட்சம் பேர் இன்னும் எத்தனை நாட்களுக்கு, துன்பத்தை அனுபவிக்க வேண்டும்? இவ்வாறு குடியுரிமை மறுக்கப்பட்ட 19 லட்சம் பேரை அரசு எவ்வாறு கையாளப்போகிறது?” என்று அந்த பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.