டில்லி

நாட்டின் பொருளாதாரத்துக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் தொடர்பு கிடையாது என்னும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கு ப சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் வரிச் சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.  விவாதத்தில் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாகாந்த் துபே  ”நமது நாட்டுப் பொருளாதாரத்துக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் (ஜிடிபிக்கும்) எந்தவிதமான தொடர்பும் இல்லை.  ஆகவே  ஜிடிபி பற்றிப் பேசுபவர்கள்  நம்முடைய நாட்டுப் பொருளாதார வளர்ச்சியுடன் ஜிடிபியை தொடர்புப்படுத்திப் பேசுவதை நிறுத்த வேண்டும். உண்மையில்  ஜிடிபியைக் காட்டிலும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம் ஆகும்.

கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் ஜிடிபி என்பது வந்தது.  ஜிடிபி என்பது அதற்கு முன்பு  இல்லை.  இது குறித்து  பொருளாதார வல்லுநர் குஸ்நெட் கூறுகையில், பைபிள், ராமாயணம், மகாபாரதம் போன்று ஜிடிபியை நம்பத்தேவையில்லை. ஏனெனில் எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் அளவுகோலாக ஜிடிபி இருக்காது என்றார்” எனத் தெரிவித்தார்

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் டிவிட்டரில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் ஆவர், “நம்முடைய நாட்டுப் பொருளாதாரத்துக்கு ஜிடிபி புள்ளிவிவரங்கள் தொடர்பில்லாதது.   ஆனால்  தனிநபர் வருமான வரியை நீக்க வேண்டும் என்பதும் இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்.என்பதுமே பாஜகவின் பொருளாதார சீர்திருத்த ஆலோசனைகள்.  இனி  இந்தியப் பொருளாதாரத்தைக் கடவுள்தான் காப்பாற்ற முடியும்” எனப் பதிந்துள்ளார்.