மதுரை: அமர்சேவா சங்க நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மொத்தம் 16 ‍பேருக்கு மத்திய அரசின் சார்பில் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 7 பேருக்கும் பத்ம விபூஷன் விருதுகளும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விபூஷன்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்ணான்டஸ் மற்றும் விளையாட்டு வீராங்கனை மேரிகோம் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷன் விருது

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வுப் பணியில் கடந்த 38 ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவரும் அமர்சேவா சங்கத்தின் நிறுவனருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் வேணு சீனிவாசன், பேட்மின்டன் வீராங்கனை சிந்து, கோவாவின் மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட பலரும் இந்த விருதைப் பெறுகின்றனர்.

பத்மஸ்ரீ விருது

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜகதீஷ் லால் அவுஜா, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளை தம் செலவில் செய்த உத்திரப்பிரதேச சமூக சேவகர் முகமது ஷெரீப், ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவிய பழ வியாபாரி ஹஜப்பா உள்ளிட்ட பலருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில், இந்த விருதுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.