ஸ்லாமாபாத்

அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றிய ஹவுடி மோடி நிகழ்ச்சிக்குக் கூட்டம் வரவில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் விமர்சித்துள்ளார்.

ஐநா சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அமெரிக்காவுக்கு 7 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியப் பிரதமர் மோடி சென்றுள்ளார்.   அந்த சுற்றுப்பயணத்தின்  முதல்கட்டமாக,  டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் மோடி மற்றும்  அமெரிக்க அதிபர் அதிபர் டிரம்ப் இணைந்து பங்கேற்றனர்.

ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் சுமார் 50,000க்கும் அதிகமான இந்திய அமெரிக்க வாழ் மக்கள் பங்கேற்றனர்.    அத்துடன் இந்த நிகழ்ச்சியில் மோடி – டிரம்ப்  ஆகிய இருவரும் இணைந்து பயங்கரவாதம் உட்பட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்துப் பேசி உள்ளனர்    அத்துடன் இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் விவகாரம்  தொடர்பாகப் பேசும் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மோடி மிகக்  கடுமையாக விமர்சித்தார்.

அதையொட்டி ஹவுடி மோடி நிகழ்ச்சியை பாகிஸ்தான் அறிவியல் துறை அமைச்சர் ஃபவாத் ஹுசைன்  தனது டிவிட்டர் பக்கத்தில், “இது ஒரு  நம்பிக்கையில்லாத நிகழ்ச்சி…இந்தியா  கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து அமெரிக்கா, கனடா மற்றும் பல நாடுகளிலிருந்து இவ்வளவு கூட்டத்தை மட்டுமே திரட்ட முடிந்திருக்கிறது.   இதன் மூலம் பணத்தைக் கொண்டு எல்லாவற்றையும் வாங்க  முடியாது என்பதைக் காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இது இந்தியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.   பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத்தின் இந்த விமர்சனத்திற்கு இந்தியர்கள் பலரும் அவரின் பதிவின் பின்னூட்டத்தில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது அரங்குகள் முழுவதும் நிரம்பியே இருந்தன என்பதை விளக்கும் வகையில் புகைப்படங்களைப் பதிவிட்டு அவருக்குப் பதிலடி அளித்துள்ளனர்.