முசாஃபர்கர்

புது மணப்பெண் ஒருவர் தன் கணவனைக் கொல்ல வைத்த விஷத்தால் அந்த குடும்பத்தை சேர்ந்த 13 பேர் மரணம் அடைந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் முசாஃபர்கர் நகரில் வசிக்கும் இளம் பெண் ஆஷியா.  இவருக்கும் அம்ஜத் என்னும் இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.   கணவர் வீட்டில் வசித்து வரும் ஆஷியா யாருடனும் ஒட்டாமல் இருந்து வந்துள்ளார்.   ஆஷியாவின் புகுந்த வீட்டில் 27 பேர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று அம்ஜத்தின் தாயார் தனது குடும்பத்தினருக்காக லஸ்ஸி தயாரித்து அளித்துள்ளார்.   அதை சாப்பிட்டதும் குடும்பத்தினர் மயக்கம் வாந்தி வந்து அவதிப்பட்டுள்ளனர்.   அதை தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   இதையொட்டி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.   முதலில் பல்லி விழுந்ததால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரிக்கப்பட்டது.

விசாரணையின் போது ஆயிஷாவின் போக்கில் சந்தேகம் அடைந்த போலிசார் அவரிடம் தீவிரமாக விசாரித்துள்ளார்.   அப்போது ஆஷியா தனது கணவரைக் கொல்ல பாலில் விஷம் கலந்ததாகவும் அந்தப் பால் தவறுதலாக தயிருடன் கலந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவருக்கு திருமணத்துக்கு முன்பே ஒரு காதலன் இருந்ததும்,   ஆயிஷா ஏற்கனவே அவருடன் தாய் வீட்டிலிருந்து ஓடிப் போய் பின்பு மீட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.   கணவரை விஷம் வைத்துக் கொன்று விட்டு தன்னுடன் ஓடி வருமாறு காதலன் கொடுத்த விஷத்தை கணவருக்கு கொடுக்க அயிஷா முயன்றுள்ளார்.  ஆனால் ஆயிஷாவின் முயற்சி தோல்வி அடைந்து 13 பேர் மரணம் அடைந்ததையும் ஆயிஷா ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆயிஷாவை கைது செய்த போலிசார் தலை மறைவான அவரது காதலரை தேடி வருகின்றனர்.