லண்டன்: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கன் அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 227 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அஸ்கார் மற்றும் சத்ரான் ஆகிய இருவரும் தலா 42 ரன்களை அதிகபட்சமாக எடுத்தனர்.

பாகிஸ்தானின் ஷகீன் அஃப்ரிடி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வகாப் ரியாஸ் மற்றும் வாஸிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பின்னர், எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, உண்மையிலேயே தடுமாறித்தான் போனது. ஒரு கட்டத்தில் ஆஃப்கன் அணிதான் ஜெயிக்கும் என்ற நிலைமை இருந்தது. அந்த அணியின் இமாட் வாஸிம் அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார்.

பாபர் ஆஸம் 45 ரன்களை அடித்தார். முடிவில், 49.4 ஓவர்களில் ஒருவழியாக வெற்றியை எட்டியது பாகிஸ்தான்.
ஆஃப்கன் தரப்பில் முஜிபுர் ரஹ்மானும், நபியும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆஃப்கன் அணி, அனுபவமின்மையால் செய்த பல தவறுகளாலேயே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது எனலாம். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டிக்கான தனது வாய்ப்பை பாகிஸ்தான் தக்கவைத்துக் கொண்டுள்ளது.