ஜோத்பூர்

ன்று நடைபெற உள்ள நான்காம் கட்ட வாக்குப் பதிவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் முதல் முதலாக வாக்களிக்கின்றனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குடி பெயர்ந்த இந்துக்களுக்கு இந்திய அரசு குடியுரிமை அளிக்க உள்ளதாக கடந்த 2016 ஆம் வருடம் அறிவிக்கப் பட்டது.   இந்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம் மாவட்ட நீதிபதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தை அளித்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரில் இந்திய குடியுரிமை கோரி 3090 விண்ணப்பங்கள் வந்தன.   அவைகள் பரிசீலிக்கப்பட்டு இதுவரை சுமார் ஆயிரம் பேருக்கு மேல் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளன.   அவர்கள் இன்று ஜோத்பூரில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவில் முதல் முதலாக வாக்களிக்க உள்ளனர்.

இது குறித்து ரேவாரம் பீல் என்னும் 90 வயது முதியவர், “நாங்கள் கடந்த 2001 ஆம் வருடம் மே மாதம் 18 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தோம்.   எங்களுக்கு 18 ஆண்டுகள் கழித்து இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.    இதன் மூலம் நான், என் மனைவி, என் மகன் மற்றும் மருமகள் இந்தியாவில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளோம்.

எனது மகன் கோவர்தன் பீல் ஹோமியோபதி மருத்துவம் படித்துள்ளார்.    நாங்கள் ஜோத்பூரில் உள்ள ராதாபீல் பஸ்தி என்னும் இடத்தில் வசித்து வருகிறோம்.   எங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைத்தில் மகிழ்ச்சி அடைகிறோம்.    எங்களில் பலர் குடியுரிமைக்காக காத்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.