ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்களின் தாக்குதல்களை முறியடித்து, இந்திய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந் நிலையில், இன்று எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இது குறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரின் புஞ்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் வீரர்கள் சிறிய ரக துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது என்றார்.

2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி 3,200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பாக். ராணுவம் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல்களில், 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 120 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.