ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரிட்டன் பிரதம்ர் போரிஸ் ஜான்சன் மற்றும் சவுதி இளவரசர் சல்மான் ஆகியோருடன் தொலைப்பேசியில் விவாதித்துள்ளார்.

கடந்த திங்கள் அன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370ஐ ரத்து செய்த இந்திய அரசு அம்மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகப்  பிரித்தது.  இதன் மூலம் காஷ்மீருக்கு தனிக் கொடி, தனி அரசியல் சட்டம் ஆகியவற்றை அமைக்கும் அதிகாரம் முடிவுக்கு வந்துள்ளது.  ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பகுதிகளும் இனி மற்ற யூனியன் பிரதேசங்களைப் போல் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார்.   அத்துடன் இந்த விவகாரத்தில்  தலையிட அமெரிக்காவுக்குக் கோரிக்கை விடுத்தார்.  அமெரிக்கா இந்தப் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை எனக் கூறி தலையிட மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே தனக்கு ஆதரவு கோரி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேறு நாடுகளின் உதைவ்யை கோரி உள்ளார்.  காஷ்மீர் விவகாரம் குறித்து பிரிட்டன்பிரதம்ர் போரிஸ் ஜான்சன், சவுதி அரேபிய இளவரசர் சல்மான் ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசிய இம்ரான்கான் இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி விரைவில் சீனாவுக்குச் சென்று காஷ்மீர் விவகாரம் குறித்தும் இந்தியாவுடனான உறவு அந்நாட்டு அதிபருடன் விவாதிக்க  உள்ளார் எனப் பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   ஏற்கனவே மலேசியா மற்றும் துருக்கி தலைவர்களுடன் இம்ரான் கான் இது குறித்துப் பேசி உள்ளார்.

அது மட்டுமின்றி இது குறித்து ஐநா பாதுகாப்பு சபையிடம் பாகிஸ்தான் புகார் அளித்து இந்தியா மீது அனைத்து நாடுகளின் அழுத்தத்தை கொண்டு வர முயல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.