சென்னை:

ழனி முருகன் கோவிலுக்கு உற்சவர் சிலை தங்கத்தில் செய்ததில், தங்கம் கையாடல் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தின் தலைமை ஸ்பதியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான முத்தையா கைது செய்யப்பட்டுள்ளார்.

அறுபடை முருகன் கோவில்களில் முதன்மையானதான பழனி பால தண்டாயுதபாணி கோயிலுக்கு தங்கத்தில் உற்சவர் சிலை செய்ததில், முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து,  பத்மஸ்ரீ விருது பெற்ற தலைமை ஸ்தபதி முத்தையா, மற்றும் அப்போதைய கோவில் இணை ஆணையரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்பதி முத்தையா மீது, ஏற்கனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை மோசடி தொடர்பான வழக்கில்  காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றுள்ள நிலையில், பழனி சிலை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழனி கோயிலில் ஏற்கனவே  தொன்மையான உற்சவர் இருக்கும் நிலையில், விதிகளை மீறி 2004-ம்  ஆண்டு புதிய உற்சவர் சிலை செய்ய அப்போதைய ஜெ.தலைமையிலான அரசு முடிவு செய்தது.

அதன்படி 200 கிலோ எடையில் பஞ்சலோகத்தால் ஆன சிலை செய்யவும், அதற்கு  10 கிலோ தங்கம் தேவை எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருத்தணி முருகன் கோவிலில் இருந்து 10 கிலோ தங்கம் பெறப்பட்டு உற்சவர் சிலை செய்யப்பட்டது.

இந்த சிலை சில மாதங்களிலேயே கருத்து போனதால் சலசலப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, அந்த உற்சவர் சிலையை  வெளியே பூஜைக்கு எடுக்காமல், இருட்டு அறையில் பூட்டி வைக்கப்பட்டது.

தற்போது உயர்நீதி மன்ற உத்தரவுபடி, ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் சிலை தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நிலையில் அவரது குழுவை சேர்ந்த  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நடத்திய ஆய்வில் இது வெளிச்சத்துக்கு வந்தது.

கடந்த 14 ஆண்டுகளாக இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முருகன் உற்சவர் சிலையை மீட்டு ஆய்வு செய்தனர்.  மேலும்,  ஐஐடி தொழில்நுட்ப நிபுணர் குழுவிடம் கொடுத்தும்  பரிசோதிக்கப்பட்டது. அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

சுமார் 220 கிலோ எடை உள்ள அந்த சிலையில், 10 சதவிகிதம் அளவுக்க்கு தங்கம் இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவித்தது. அதாவது 22 கிலோ தங்கம் அந்த சிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், திருத்தணி கோயிலில் இருந்து  10 கிலோ தங்கம் மட்டுமே பெற அறிவுறுத்தப்பட்ட நிலையில், கூடுதலாக 12 தங்கம் எப்படி வந்தது என்பது கேள்விக்குறியானது. அந்த உற்சவர் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட வில்லை என்றும் அந்த சிலையில் வெள்ளி சேர்க்க வில்லை என்றும் தெரிவித்துள்ளது.

200 கிலோ அளவிலான சிலை மட்டுமே செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், 221 கிலோ எடையில் சிலை செய்யப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுந்தது. இந்த சிலை செய்ய கூடுதலாக 12 கிலோ தங்கத்தை அளித்தவர்கள் யார் யார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து நம்பிக்கை மோசடி செய்து தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், தலைமை ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட முத்தையா, கும்பகோணம் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபவ முன் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் பழனி கோயில் முன்னாள் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜாவையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.