• சென்னை

ழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியிட்டு வழங்கப்பட்டு தமிழகம் தனது 29  ஆம் பெருமையை அடைந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பிரபலமாக உள்ள பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை அது போல 28 பொருட்களுக்கு  புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மதுரை மல்லிகைப்பூ, நீலகிரி தேயிலை ஆகியைவை குறிப்பிடத்தக்கதாகும். இதைத் தவிர காஞ்சி பட்டு, மதுரை சுங்கடி சேலை, தஞ்சாவூர் ஓவியங்கள், உள்ளிட்ட பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு  அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் பழனியும்  ஒன்றாகும். இங்குக் கோவிலின் முக்கிய பிரசாதம் பஞ்சாமிர்தம் ஆகும். பஞ்சாமிர்தம் என்பது ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அவை வாழைப்பழம், வெல்லம், பசு நெய், தேன் மற்றும் ஏலக்காய் ஆகும். பஞ்ச என்பதற்கு ஐந்து எனவும் அமிர்தம் என்பதற்குச் சுவையான பண்டம் எனவும் தமிழில் பொருள் உண்டு. இந்த ஐந்து  பொருட்களுடன் சுவைக்காக பேரீச்சம்பழம் மற்றும் கல்கண்டு ஆகியவை சேர்க்கப்படுகின்றன.

பஞ்சாமிர்தத்துக்கு தற்போது புவிசார் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.   பழனியில் உள்ள தண்டபாணி சாமி கோவிலின் முக்கிய பிரசாதமான பஞ்சாமிர்தம் கோவிலில் மட்டுமின்றி நகரில் பல இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. எனவே இந்த புவிசார் அடையாளமானது கோவிலுக்கு மட்டுமின்றி நகர் முழுமைக்கும் அளிக்கப்பட்டுள்ளது.  இது தமிழ்நாட்டுக்கு அளிக்கபட்டுள்ள 29ஆம் புவிசார் அடையாளமாகும்.