சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என தற்போது சொல்ல தேவையில்லை என பாஜக மூத்த தலைவர்  பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
கடுமையான இழுபறிக்கு பின்னர், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என இன்று அறிவிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் வேண்டுகோளின்படி கட்சியின் வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்காலிகமாக கட்சியின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சியில் ஒன்றான பாரதியஜனதா கட்சி தனது கருத்தை தெரிவித்து உள்ளது. செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன்,  அதிமுக-பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என தற்போது சொல்ல தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பிரச்னை எழும், இதில் குளிர்காய காத்திருந்த கட்சிகளுக்கு முடிவு கட்டக்கூடிய வகையில் அறிவிப்பு வெளியானதில் மகிழ்ச்சி என்று கூறியவர், அதிமுகவில் நீடித்து வந்த பெருங்குழப்பம் இன்று முடிவுக்கு வந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளராக போட்டி யிடுவார் என துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று காலை அறிவித்தார். அதிமுகவில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவு ஈபிஎஸ்க்கு இருந்ததாகவும் அதனால் முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்ஸே போட்டியிட்டும் என ஓபிஎஸ் தெரிவித்து விட்டதாகவும் தெரிகிறது. இருப்பினும் இந்த முடிவு அதிமுகவினரிடையே மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவே அமைந்திருக்கிறது.
இந்த பிரச்னை தற்போது ஓய்ந்திருக்கும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் இருப்பதால் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் தான் போட்டியிடுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என தற்போதைக்கு சொல்லத் தேவையில்லை என்றும் கூட்டணிக்கு பிறகு தான் அதனை பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.