பனாமா

பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டினெல் ஊழல் வழக்கில்  இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.. கடந்த 2009-2014  ஆண்டுகளில் பனாமா நாட்டின் அதிபராக இருந்தவர் 67 வயதாகும் மார்ட்டினெல். இவருடைய பதவிக் காலத்தின் போது, போட்டி அரசியல்வாதிகளை அச்சுறுத்துவதற்காக தனியார் உரையாடல்களைப் பதிவு செய்வதற்கு அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்தார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

அத்துடன் 150 அரசியல்வாதிகள், தொழிற்சங்க தலைவர்கள் ஆகியோருடன் பல பத்திரிகையாளர்களையும் உளவு பார்த்ததாகவும் கூறப்பட்டது. அதில் குறிப்பாக எதிர்க்கட்சியான புரட்சிகர ஜனநாயக கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோஸ் லூயிஸ் வரேலாவை உளவு பார்த்ததாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கு பொய் வழக்கு எனவும் தாம் எந்த குற்றமும் செய்யவில்லை  என மார்ட்டினெல் திட்டவட்டமாக மறுத்தார்.

மார்ட்டினெல்லை கைது செய்து விசாரணை நடத்த பனாமா உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதையொட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில்  கோரல் கேப்லஸ் என்ற இடத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தபோது அவர் கைது செய்து, பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கு பனாமா நாட்டில் விசாரணை செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில் மார்ட்டினெல் மீதான குற்றச்சாட்டுச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.