பெயருக்கு ஏற்ப இரும்பு மங்கையாக உள்ள இந்திரா கதிரேசன்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் கோவிந்த புத்தூர். இந்த கிராமத்தில் முக்கிய தொழிலே விவசாயம்தான். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் கள்ளச்சாராயம்  விற்பனை நடந்து வந்துள்ளது.  இதனைத் தடுக்கும் பொருட்டு கிராம பெண்கள் பலரிடமும் மனு கொடுத்து பயனில்லாமல் வெறுத்துப்போன நிலையில், அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இக்கிராமப்பெண்கள் இந்திரா கதிரேசனை கோவிந்த புத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெறச் செய்தனர்.

15 வருடங்களுக்கும் மேலாகத் தடையில்லாமல் நடைபெற்று வந்த பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் மது விற்பனையை உடனடியாக நிறுத்தும்படி சம்பந்தப்பட்ட நபர்களிடம் நல்லபடியாகக் கேட்டுக்கொண்டுள்ளார் ஊராட்சி மன்றத் தலைவி இந்திரா கதிரேசன்.

ஒரு சிலர் அவரது கருத்தை ஏற்றுக் கொண்டு இனி மதுபானம் விற்பதில்லை என உறுதி அளித்து உள்ளனர்.  ஆனால் மற்றும் சிலர் சற்று அடம் பிடிக்கவே ஜெயங்கொண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸைத் தொடர்பு கொண்டு, “எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பதால் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கிராமம் மதுவில்லா கிராமமாக மாற வேண்டும் அதற்கு காவல்துறை ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையென்றால் எங்கள் கிராம பெண்கள் அனைவரையும் ஒன்று திரட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்று துணிச்சலாகக் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மோகன்தாஸ், தனிப்படை ஒன்றை கோவிந்தபுத்தூர் கிராமத்திற்கு அனுப்பி கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை எச்சரித்து இனி மதுபானம் விற்பனை செய்யமாட்டோம் என உறுதி மொழி கடிதத்தை எழுதி வாங்கிக் கொண்டு, இனி மது விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் எனக் கடுமையாக எச்சரிக்கையையும் வழங்கச்செய்துள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவி இந்திராவின் இந்த துணிச்சலான செயலை அறிந்த பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். மதுவுக்கு எதிராகக் குரல் கொடுத்த கோவிந்தபுத்தூர் தலைவி இந்திரா என்ற பெயருக்கேற்ப இரும்பு மங்கையாக உள்ளார் என அனைவரிடமிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

– லெட்சுமி பிரியா