வாஷிங்டன்: அமெரிக்க நிர்வாகத்தில், கொரோனா பேரிடர் கால மேலாண்மை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு அந்நாட்டின் சியாட்டில் பிராந்தியப் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் உதாரணமாகியுள்ளது.

செவ்விந்திய அமெரிக்க குடிமக்களின் சுகாதாரப் பிரச்சினையை கவனித்துக் கொள்ளும் அங்குள்ள சமூக சுகாதார நிலையம், கவுன்ட்டி, மாகாணம் மற்றும் பெடரல் சுகாதார ஏஜென்சிகளிடம், கொரோனா பாதிப்பையொட்டி, அவசரகால மருத்துவ உதவிகளை நாடியது.

அதாவது இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் நடைபெற்ற சம்பவம் இது.

அதாவது, பரிசோதனை செய்வதற்கான மருத்துவ உபகரணங்கள் கேட்கப்பட்டிருந்தன. ஆனால், 3 வாரங்கள் கழித்து அவர்களுக்கு வந்த சேர்ந்த பொருட்களை கண்ட பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களுக்கு ‘பாடி பேக்ஸ்’ எனப்படும் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்லப் பயன்படும் உபகரணங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

மருத்துவ உபகரணம் மாறிவந்துவிட்டதாக சமாதானம் சொல்லப்பட்டாலும், இந்த நிகழ்வானது, அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழும் பூர்வ செவ்விந்திய குடிகளின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

அதாவது, உத்தரவாதமளிக்கப்பட்ட வகையில், அவர்களுக்கான உபகரணங்களோ மற்றும் நிதியுதவியோ வந்துசேரவில்லை. வேறுபல பகுதிகளிலும் இதே நிலைமைதான்!

இந்த கோபம் மற்றும் நிர்வாக குழப்பம், இந்த அதிபர் தேர்தலில் எதிரொலித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூர்வகுடிகள் வாழும் நவோஜா பகுதியில் மொத்தம் 85,000 வாக்குகள் உள்ளன. அதில், தேர்தலில் பதிவானது 76,000 வாக்குகள். அதாவது மொத்தம் 89%.

அந்த 76,000 வாக்குகளில் ஜோ பைடனுக்கு விழுந்தது 74,000. அதேசமயம், டிரம்ப் பெற்றதோ வெறும் 2000 வாக்குகள்.

அரிசோனா மாகாணத்தில், குடியரசுக் கட்சிக்கே எப்போதும் வாக்களிக்கும் பூர்வகுடி மக்கள், இம்முறை ஜோ பைடனுக்கு மாற்றி போட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.