திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து, 4 மணிக்கு கோவில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

பரணி தீபத்தை சிவாச்சாரியா்கள் கைகளில் சுமந்தபடி கோவில் 2, 3-ஆம் பிரகாரங்கள் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதியில் வலம் வந்தனர்.இந்நிகழ்வில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆட்சியர் சந்தீப் நந்தீரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குள் பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள், சுவாமியை தூக்கும் பக்தா்கள், காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், பத்திரிகையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில் 4 டிஐஜிகள், 8 எஸ்பிக்கள் உள்ளபட 2,700 காவல்கள் தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் உள்ளூா், வெளியூா் பக்தா்கள், கோவில் உபயதாரா்கள், கட்டளைதாரா்கள் கோயிலுக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரவும், வெளியூா் வாகனங்கள் திருவண்ணாமலைக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களை நகருக்குள் வருவதை தடுப்பதற்காக 15 சாலை சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மகா தீப நிகழ்ச்சி தொலைக்காட்சிகள், இணையதளம் வழியாக நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.