மேசானா, குஜராத்

பிரபல பாலிவுட் நடிகரும் முன்னாள் பாஜக மக்களவை உறுப்பினருமான பரேஷ் ராவல் சகோதரர்  உள்ளிட்ட 20 பேர் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகரான பரேஷ் ராவல் இந்தி திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் ஆவார்.  இவர் பாஜகவைச் சேர்ந்தவர்.  இவர் கடந்த 2014 முதல் 2019 வரை அகமதாபாத் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.  இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார்.  குஜராத்தைச் சேர்ந்த பரேஷ் ராவலின் சகோதரர் பெயர் ஹிமன்சு தயாபாய் ராவல் ஆகும்.

குஜராத்  மாநிலத்தில் மேசானா நகருக்கு வெளிப்புறத்தில் ஒரு விடுதியில் நள்ளிரவில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.   இவர்கள் அனைவரும் மேசானாவை சேர்ந்தவர்கள் இல்லை எனவும் தெரிய வந்தது.  அதையொட்டி காவல்துறையினர் நள்ளிரவு 1.30 மணிக்கு இங்கு திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.

மல்கோத்ரா கிளப் என்னும் அந்த விடுதியில் அப்போது 20 பேர் சூதாடிக் கொண்டிருந்தௌள்ளன்ர்.  அவர்களை கையும் களவுமாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அந்த 20 பேரில் பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினரும் நடிகருமான பரேஷ் ராவலின் சகோதரர் ஹிமன்சு தயாபாய் ராவலும் ஒருவர ஆவார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1.94 லட்சம் ரொக்கம், 16 மொபைல்கள், மூன்று கார்கள், மற்றும் சீட்டுக் கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.   கைது செய்யப்பட்டவர்கள் அகமதாபாத் மற்றும் காந்திநகர் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.