பிரச்சினைகள் தீர வேண்டுமா?  சில வழிபாட்டு முறைகள்!

பிரச்சினைகள் தீரச் செய்ய வேண்டிய சில வழிபாட்டு முறைகள் குறித்த விவரங்கள்

அருகிலிருக்கும் சிவன் கோயில்களில் உள்ள வில்வ மரம் மற்றும் வன்னி மரத்தை அதிகாலையில் 26 முறை சுற்றி வலம் வந்து வேண்டிக் கொள்வதால் உங்களுடைய குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.

வழக்குகளில் ஈடுபட்டுள்ளவருக்குச் சாதகமான தீர்ப்பு வரும். இவ்விரு மரங்களுக்கும் தெய்வீக சக்தி உண்டு. நீங்கள் கேட்பது அம்மரத்திற்கு நன்றாகவே கேட்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் மரத்திற்குக் கீழ் சர்ப்ப தெய்வங்கள் வீற்றிருக்கும் இடத்தில் இரு நாகங்கள் பின்னிப் பிணைந்தது போல் இருக்கும் அல்லவா?

அவருக்கு வெள்ளி தோறும் காலை பத்தரை முதல் பண்ணிரென்று மணிக்குள் ராகு காலத்தில் செவ்வரளி பூ சாற்றி, மஞ்சள் – குங்குமம் இட்டு, நெய் தீபம் ஏற்றி கணவன், மனைவி இருவர் பெயரிலும் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்தால் கணவன்-மனைவி பிரச்சனைகள் தீரும்.

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் இது.

நம்பிக்கையுடன் செய்து பாருங்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருந்தால் கடவுளின் மேல் இருக்கும் நம்பிக்கையும் குறைந்து விடும்.

ஆனால் அந்த சமயத்தில் தான் நீங்கள் ஆலயம் சென்று தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தீபம் ஏற்றுவதால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முடிவு உங்களுக்குச் சாதகமாக வரும். தீராத கடன் பிரச்சினைகளுக்கு, கழுத்தை நெறிக்கும் பணப் பிரச்சினைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வணங்கி வருவது துன்பம் தீர்க்கும்.

வீட்டில் ஏதாவது துஷ்ட சக்திகள் இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால் வெள்ளெருக்கு விநாயகர் ஒன்றை வாங்கி யாருடைய கைக்கும் எட்டாத வகையில் உயரமான இடத்தில் வைத்து விடுங்கள்.

இப்படிப்பட்ட குழப்பமான பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

ஒவ்வொரு முறை ஆலயம் செல்லும் போதும் அங்கிருக்கும் திரிசூலத்தில் குங்குமம் வைத்து, எலுமிச்சம்பழம் ஒன்றைக் குத்திவிட்டு மனதார வேண்டிக் கொண்டால் வீட்டில் இருக்கும் அல்லது வியாபார தளத்தில் இருக்கும் செய்வினை, கண்திருஷ்டி போன்றவை விலகி ஓடி விடும்.

நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்து வைத்திருக்கும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றால் செவ்வாய்க்கிழமை தோறும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கி நெய் தீபம் ஏற்றி 12 முறை வலம் வந்தால் கொடுத்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும்.

பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகும். தொழில் விருத்தி ஏற்படும்.

வழக்குகளில் வெற்றி கிட்டும்.

பைரவர் சன்னதியில் நெய் தீபம் ஏற்றித் தொடர்ந்து எட்டு செவ்வாய்க் கிழமை சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் கண்டிப்பாக வாராக் கடன்கள் வசூலாகும்.

கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து கொண்டிருந்தால் இந்த பரிகாரம் செய்யலாம்.

வெள்ளிக்கிழமை தோறும் நவக்கிரக சன்னதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு புதிய அகல் விளக்கு ஒன்றை வாங்கி அதில் கற்கண்டு சிறிது போட்டு நெய் தீபம் ஏற்றி வந்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்.

இது போன்ற எளிய பரிகாரங்கள் தொடர்ந்து பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கான பதிவு தான் இது.

பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. குறை தீர்க்கும் பரிகாரங்கள் சாஸ்திரத்தில் ஏராளமாக இருக்கின்றன. கடவுள் கொடுக்கும் சோதனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்குப் பரிகாரங்கள் துணை புரிகின்றன.

பிரச்சனை என்று புலம்பிக் கொண்டிருக்காமல் இறைவனை நம்புங்கள். அவனின்றி அணுவும் அசையாது. வளமான வாழ்விற்கு வழித்துணையாக இறைவன் ஒருவரே வருவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.