டில்லி,

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க கேரளா முயற்சித்து வந்தது. அதை எதிர்த்து தமிழகம் தொடர்ந்து வழக்கில், அணை அருகே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள கேரளாவுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்தது.

 

முல்லைப்பெரியாறு அணை பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்ட கேரள அரசு ஏற்பாடு செய்து வந்தது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கேரள அரசு அதை செவிமடுக்காமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ள ஆயத்தமானது.

இதையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால்,  தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து, கேரளாவுக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்து. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முல்லைப்பெ ரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க அனுமதிக்கூடாது என வாதிட்டார். மேலும் முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் நிரந்தர கட்டுமானங்களை ஏற்படுத்தினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், அந்தப் பகுதியில் சிறிய வகை வன விலங்குகள் வாழமுடியாத நிலை ஏற்படும் என்றும் வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து,  முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க கேரளாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

மேலும், இதுகுறித்து இரு மாநிலங்களும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.