டில்லி
இன்று பாராளுமன்ற நிலைக் குழு ஐசிஐசிஐ வங்கி வீடியோகோன் நிறுவனத்துக்கு வழங்கிய கடன் குறித்தும் நிரவ் மோடியின் வங்கி மோசடி குறித்தும் விவாதிக்க உள்ளது.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பல்லாயிரக்கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரிக்க சிபிஐ முயற்சிகள் எடுத்து வருகின்றன. பிரபல நிறுவனமான வீடியோகோன் ஐசிஐசிஐ வங்கியிடம் கடன் வாங்கிய தொகையை திருப்பித் தரவில்லை. கடன் பெறுவதற்காக வங்கித் தலைவர் சந்தா கோச்சாரின் கணவருக்கு தங்கள் நிறுவனத்தில் ஒன்றை மலிவு விலையில் விற்றதாக புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரங்கள் குறித்து இன்று பராளுமன்ற நிலைக்குழு விவாதிக்க உள்ளது. இது குறித்து குழுவின் உறுப்பினர் ஒருவர், “சமீபத்தில் நடைபெற்று வரும் வங்கி மோசடிகளை குழு கண்காணித்து வருகிறது. மேலும் ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் உள்ள வங்கிகளில் இது குறித்த தகவல்கள் மற்றும் இந்த குற்றங்கள் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறியப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து நிதி அமைச்சக அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.