டெல்லி: நாடாளுமன்றத்தில் 4 மசோதாக்களை எதிர்க்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 18 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இந்த தொடரில் அவசர சட்டத்தை மாற்ற கொண்டு வரப்படும் 11 மசோதாக்கள் உட்பட, 23 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் 4 மசோதாக்களை எதிர்க்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் அவசர சட்டங்களுக்கு மாற்றாக 11 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. வங்கி சீர்திருத்த சட்ட மசோதா, வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்.

எங்களுடன் இணையும் கட்சிகளுடன் ஆலோசித்து எதிர்ப்போம். முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று  நம்புகிறோம். எங்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.