சென்னை: கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் பணியில் தன்னார்வலர்களாக செயல்படுவதற்கு பகுதிநேர ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய் பரவலை தடுக்க பிரதமரும், முதல்வரும் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில், தன்னார்வலர்களாக பணியாற்றுவதற்கு 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளோம்.

எங்களின் சேவையை பள்ளிக் கல்வித்துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடையுத்தரவு காரணமாக, பள்ளிகள் நடக்காத சூழலில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் விரைவாக கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைப்போல், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான ஊதியத்தையும் தடையின்றி வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.