சென்னை: அரியர் மாணவர்களுக்கு தமிழகஅரசு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய வழக்கில், அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்குப் புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமான ஏஐசிடிஇ, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

‘அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை’ என்று ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது .

தமிழகத்தில், கலை – அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேரச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அறிவிப்பு வெளியிட்டது.  இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (AICTE) இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும விதிகளுக்கு முரணானது.

கொரோனா  பேரிடர் காலத்தில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர, பிற மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சிக்கலானது என்பதால், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை முன்னேற்றி, அவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளச் செய்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டதாகவும், இறுதிப் பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் கூறியுள்ளது.

அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும் எனவும், மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை.

அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது.

இறுதியாண்டு மாணவர்களின் அரியர் பாடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் அறிவித்துள்ளதாகவும், இந்த விதிகளைப் பின்பற்றும்படி அனைத்துத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுக்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த வழக்குகள், விரைவில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன.