பிரிட்டன்:

பிரிட்டன் அரசின் தடைகள் நீட்டிப்பால் பாஸ்போர்ட், விசா வழங்கும் பணிகள் ஜன.8 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

2020-ம் ஆண்டை தன்வசப்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திய கொரோனா தொற்று தற்போது பிரிட்டனில் புது வடிவம் பெற்று ராக்கெட் வேகத்தில் பரவத் தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றின் புதிய வடிவம் அதீத கொடிய வகை தொற்று என்பதற்கான ஆய்வுகள் இன்னும் இல்லை. இருப்பினும் இந்தத் தொற்றை கண்டு மக்கள் அஞ்சுவதற்கான காரணம், இதன் பரவும் வேகமே…உருமாறிய கொரோனா, 70% வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளது என்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கடந்த 15-ம் தேதி பிரிட்டனின் கென்ட்(kent) பகுதியில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா அதன் பிறகு லண்டன், பிரிட்டனின் ஒன்றிணைந்த பகுதிகளான ஸ்காட்லாந்து, வேல்ஸ், ஆகிய பகுதிகளுக்கும் பரவியது.

உடனே பிரிட்டன் உடனான தொடர்புகளை துண்டித்து கொள்ள உலக நாடுகள் ஆயத்தமாகி அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்தன. இருப்பினும் ஜெர்மனி(Germany), டென்மார்க்(Denmark,) இத்தாலி (Italy) நெதர்லாந்து(Netherlands) ஆகிய நாடுகளுக்கும் பரவி உள்ளது.

இவை தவிர கொரோனா தொற்றின் புதிய வடிவம் தற்போது இருமடங்கு எண்ணிக்கையில் பிரான்ஸ், அயர்லாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவிலும் உருமாறிய கொரோனா தொற்று பரவி உள்ளது. உருமாறிய கொரோனா ஆசிய நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

தற்போது தென்கொரியாவிலும் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே பாதிப்புகளை தடுக்க பிரிட்டனில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கும் பணிகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளன.

இந்நிலையில், பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக பாஸ்போர்ட், விசா வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுத்தம் ஜனவரி 8ஆம் தேதி வரை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.