விண்ணப்பித்த நான்கு நாட்களில் பாஸ்போர்ட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று  சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: ”விண்ணப்பிப்பவர்கள்,  ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பேன் கார்ட், ஆகிய மூன்று ஆவணங்களுடன் ஐ-அநெக்ஸ்ச்சர்(I-Annexure) இணைத்திருந்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்தவுடன் காவல்துறையின் சான்றாய்வு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது தத்கல் எனப்படும் துரித பாஸ்போர்ட் திட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது
download
பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவாக காவல்துறை சான்றாய்வு பெற வசதியாக மொபைல் போலீஸ் ஆப் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்று மாநிலங்களில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது தமிழகத்தில் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மொபைல் போலீஸ் ஆப் என்ற செயலியின் மூலம் காவல் துறை அதிகாரிகள் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கு காவல் துறை சான்றொப்பம் வழங்குவார்கள்.  இந்த புதிய செயலியின் மூலம் போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இத்திட்டம் ஒருமாதக் காலத்தில் சென்னை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களிலு்  சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த  இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுமக்கள் ரூ.155 செலுத்த வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “கடந்த ஆண்டு சென்னை மண்டல் பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் நான்கு லட்சத்து பத்தாயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை மூன்று லட்சத்து மூன்றாயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளன.
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பதற்கான கால அளவு 19 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளித்த மறுநாளே அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்படுவார்கள்” என்று பாலமுருகன் தெரிவித்தார்.