அகமதாபாத் :

பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்காக கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 23 வயதான ஸ்மிருதி தாக்கர் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கினார்.

இந்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 23 வயதான ஸ்மிருதி தாக்கர், தனது இரத்த பிளாஸ்மாவை அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் (எஸ்விபி) மருத்துவமனைக்கு தானம் செய்ய முடிவு செய்துள்ளார், இதனால் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும்.

இது குறித்து, குஜராத் மாநில சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் ஜெயந்தி ரவி கூறுகையில், “இதுபோன்ற பிளாஸ்மா மாற்று சிகிச்சைக்கு கேரள அரசுக்கு ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் அளித்திருந்தது . குஜராத்தில் இருந்து, அகமதாபாத் சிவில் மருத்துவமனை மற்றும் எஸ்விபி மருத்துவமனை ஆகியவை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இந்த சிகிச்சையைத் தொடங்க ஐசிஎம்ஆரின் அனுமதியைக் கோரியுள்ளன, ”

உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்குவதன் மூலம் முக்கியமான கொரோனா வைரஸ் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிளாஸ்மா பரிமாற்றம் பயன்படுத்தப்படலாம் என்று மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமையன்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிளாஸ்மா சிகிச்சை சோதனைகளை நடத்த இரு மருத்துவமனைகளுக்கும் ஒப்புதல் அளித்தது.

ஸ்மிருதி தாக்கர் கடந்த மார்ச் 19 அன்று பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து குஜராத் திரும்பி வந்தார், அப்போது அவருக்கு கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் தென்படவில்லை, இருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டதை தொடர்ந்து அவர், பரிசோதிக்கப்பட்டார், பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் இப்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.
தற்போது அவர் தனது பிளாஸ்மாவை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தானமாக வழங்க முன்வந்திருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.