சென்னை: மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்பு செய்வதற்காக,  வரும் 21-ம் தேதி முதல் குமரி, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி பணிகள், புதிய திட்டங்கள் தொடங்கி வைப்பு, பயனர்களுக்கு  உதவிகள் வழங்குவது தொடர்பாக, மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறதார்.

அதன்படி, ஏற்கனவே  20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு பணிகள் நடத்தி முடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் 4 மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வரும், 21ம் தேதி சென்னையில் இருந்து மதுரை செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 22ம் தேதி காலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலும், பிற்பகலில் தூத்துக்குடி மாவட்டத்திலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து,  23-ம் தேதி காலை கன்னியாகுமரி மாவட்டத்திலும், அன்றைய தினம்  மதியம் விருதுநகர் மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், விவசாய அமைப்பினர், தொழில் துறையினரோடு முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.