மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும், கோஷியும்’.

இரட்டை கதாநாயகர்களாக பிஜு மேனனும், பிரிதிவிராஜும் நடித்திருந்தனர். இந்த படத்தின் தெலுங்கு ரீ-மேக்கை சாகர் சந்திரா இயக்க, திரிவிக்ரம் வசனம் எழுதுகிறார்.

மலையாளத்தில் பிஜுமேனன் நடித்த வேடத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். பிரிதிவிராஜ் வேடத்தில் நடிக்க ரவிதேஜா, ராணா ஆகியோரிடம் பேச்சு நடக்கிறது.

இந்த நிலையில், தனக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படத்தின் முழுக்கதையையும் மாற்ற சொல்லி பவன்கல்யாண் உத்தரவிட்டுள்ளார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் மாற்றி அமைக்கப்படுகிறது. மலையாள படத்தில் பிஜுமேனனுக்கும், பிரிதிவிராஜுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தெலுங்கில், பிரிதிவிராஜ் வேடத்தை வில்லத்தனமாக உருவாக்குமாறு வசனகர்த்தா திரிவிக்ரமிடம் பவன் கல்யாண் கூறி விட்டதால், மீண்டும் அவர் திரைக்கதை மற்றும் வசனத்தை மாற்றி எழுதி வருகிறார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

– பா. பாரதி