தெலுங்கானாவில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் வீணாக்கும் உணவிற்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் விதமாக வீணாக்கும் உணவிற்கு அபராதம் வசூலிக்கப்படும் என விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் உணவின் அருமையை உணராமல் அதனை வீணடிப்பது உண்டு. பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளுக்கு செல்லும் பலர் முதலில் உணவை ஆர்டர் செய்து விட்டு பிடிக்கவில்லை எனில் அதனை மீதி வைத்து விட்டு வருவதும், வீணடிப்பதும் உண்டு. ஒருபுறம் ஒருவேளை உணவுக்கூட இல்லாமல் வருந்தும் சிலர் இருக்கையில், மறுபுறம் ஆடம்பரத்தின் பேரில் உணவை வீணடிப்பது புதிதல்ல.
உணவின் அருமையை உணராமல் அதனை வீணடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தெலுங்கானாவில் வாராங்கல் பகுதியில் உள்ள கேதாரி என்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. அதாவது, உணவு உண்ண வரும் வாடிக்கையாளர்கள் வீணடிக்கும் உணவிற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது குறித்து கேதாரி உணவகத்தின் உரிமையாளார் லிங்காலா கேதாரி கூறுகையில், “ இங்கு பல மக்களும் உணவு உண்ண வருகின்றனர். நாங்கள் தரமான உணவை வழங்குவது மட்டுமின்றி அதனை வீணாக்குவதை தடுக்கவும் செய்கிறோம். உணவு வீணாக்குவதை தடுப்பது எங்களில் குறிக்கோள்” என தெரிவித்தார்.
உணவை வீணாக்குவதை தடுப்பதற்காக, அந்த ஹோட்டலின் வாசலில் உணவு வகைகளின் மெனு வைக்கப்பட்டுள்ள பலகையுடன் சேர்ந்து இதற்கான விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அந்த பலகையில் சாப்பிட்ட பின் தட்டில் உணவு மீதம் இருந்து அதனை குப்பைகளில் கொட்ட நேர்ந்தால், வாடிக்கையாளர்கள் ஒரு தட்டிற்கு ரூ.50 கட்டாயம் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு அறிவிப்பை செய்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை ரூ.14,000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வீணாகும் உணவின் அளவு குறைந்துள்ளதாகவும் அதன் உரிமையாளர் லிங்காலா கேதாரி தெரிவித்துள்ளார். இதேபோன்று அவர்களின் உணவு வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கவில்லை எனில் உணவகத்தின் சார்பில் அவர்களுக்கு அபராதம் தரப்படுவதாகவும் லிங்காலா கூறியுள்ளார்.