சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது மத உணர்வை தூண்டுவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சிறுமுகையை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் காரப்பன், சமீபத்தில் அத்திவரதர் மற்றும் கிருஷ்ணர் குறித்து பேசியபோது, அவதூரான கருத்துக்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்து முன்னணி சார்பில், காரப்பன் மீது காவல்துறையினரிடம் புகாரும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது பீளமேடு காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்திவரதர், கிருஷ்ணரை பற்றி அவதூறாக பேசியதன் மூலம், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் மத உணர்வை தூண்டுதலுக்கு காரணமாக அவர் இருந்ததாக இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்து கடவுள் குறித்து அவதூறாக பேசியதாக இந்து முன்னணி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இவ்வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.