ஜம்மு: சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பாக ஜம்மு பகுதியில் பல்வேறு அரசியல் குழுக்களிடையே வரவேற்பு காணப்படுகிறது.

அவர்கள் மத்திய அரசின் இந்த முடிவை ஆதரித்து நடனமாடி, இனிப்பு வழங்கி மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.

“இந்த 370வது பிரிவு என்றாவது ஒருநாள் கட்டாயம் நீக்கப்பட்டிருக்கும். ஆனால், பாரதீய ஜனதா கட்சி இந்த தைரியமான முடிவை மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் பகுதி அரசியல்வாதிகளின் 70 ஆண்டுகால சிறப்பு சலுகை இப்போது முடிவுக்கு வருகிறது. இனிமேல், ஜம்மு பகுதி மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கும்” என்று கூறியுள்ளனர் பா.ஜ. கட்சியின் மகளிர் பிரிவினர்.

“கடந்த 1947ம் ஆண்டு முதல் சுதந்திரத்தைப் பெற்றோம். தற்போது 72 ஆண்டுகள் கழித்து இரண்டாவது சுதந்திரத்தைப் பெற்றுள்ளோம். இனிமேல் ஜம்மு பகுதி வளர்ச்சி மற்றும் செழிப்பை நோக்கிச் செல்லும்” என்று கூறியுள்ளர் டோக்ரா முன்னணியைச் சேர்ந்தவர்கள்.

“சட்டப்பிரிவு 370 என்பது வளர்ச்சிக்கான ஒரு தடையாக இருந்தது. இப்போதுதான் ஜம்மு – காஷ்மீர் இந்தியாவுடன் உண்மையாக இணைந்துள்ளது. இனிமேல் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக கிடைக்கும்” என்று ஜம்மு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் தெரிவித்தார்.