ஹைதராபத்: இளம் பெண் மருத்துவர் பிரியங்காவை  மனதை பதறச் செய்யும் வகையில் கொடூரமாக பாலியல் வன்முறைக்கு பலியாக்கி எரித்த குற்றவாளிகளுக்கு தங்கள் கண்முன்னால் உடனே தண்டனை தரவேண்டுமென மக்கள் நடத்திய பெரும் போராட்டத்தால் நீதிபதியே காவல் நிலையத்துக்கு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தைச் சார்ந்த பிரியங்கா குரூரமாக பாதி எரித்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டு, பின்பு நடந்த ஆய்வுகளில் அவர் கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என கண்டறிந்து சிசிடிவி ஆதாரங்கள் கொண்டு 4 லாரி தொழிலாளர்கள் குற்றவாளிகளுக்கான முகாந்திரங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை ஷாத் நகர் காவல் நிலையத்தில் வைத்திருந்ததை அறிந்த பொதுமக்கள் பெருமளவில் அங்கு குவியத் தொடங்கினர்.

கட்டுப்படுத்த இயலாத அளவு கூட்டம் பெருகியதோடு, குற்றவாளிகளை தங்கள் கண்முன்னால் தூக்கிலிட வேண்டுமென்று போராடத் துவங்கினர்.

இதனால், நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த முடியாத அளவிற்கு நிலைமை ஏற்பட வேறுவழியின்றி நீதிபதியே ஷாத் நகர் காவல் நிலையம் வந்து குற்றம்சாட்டப்பட்டவர்களை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ஆனாலும், நிலைமை கட்டுக்குள் இல்லாததால் தடியடி நடத்தி பாதுகாப்பு வாகனம் வருவித்து அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏற்றி சிறைக்குக் கொண்டு சென்றனர்.