கோழிக்கோடு

புதியதாக வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்டுகளில் பாஜகவின் சின்னமான தாமரை அச்சடிக்கப்பட்டிருப்பதைக்  கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய பாஸ்போர்ட் என்பது வெளிநாட்டுக்குச் செல்ல பயன்படுவது மட்டுமின்றி முக்கிய அடையாள ஆவணமாகவும் உள்ளது.  இந்தியக் குடிமக்கள் என்பதற்கு அளிக்க வேண்டிய முக்கிய ஆவணங்களில் பாஸ்போர்ட்டும் ஒன்றாகும்.   இந்த பாஸ்போர்ட்டில் இரண்டாம் பக்கத்தில்  கீழே பாஸ்போர்ட் அதிகாரி கையெழுத்து இட்டிருப்பார்.    இந்த கையெழுத்து மிகவும் முக்கியமானதாகும்.

பெங்களூருவில் புதிதாக விண்ணப்பித்தோருக்கு வழங்க வேண்டிய புது பஸ்போர்ட்டுகள் வந்தன.   அவை கடந்த வாரம் கோழிக்கோடு அலுவலகத்தில் இருந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.  இதில் பாஸ்போர்ட் அதிகாரி கையெழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் ஒரு செவ்வகத்தின் உள்ளே தாமரை மலரின் படம் அச்சடிக்கப்பட்டிருந்தது.

இந்த பாஸ்போர்ட் தற்போது நாடெங்கும் உள்ள 36 அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன.   இந்திய அரசின் பாஸ்போர்ட்டில் பாஜக சின்னமான தாமரை இடம் பெற்றுள்ளதாக மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.  பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களுக்கு இது குறித்து விளக்கம் அளிக்கத் தெரியவில்லை.   எனவே தலைமை பாஸ்போர்ட் அலுவலர் அருண் சட்டர்ஜியிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.

அருண் சட்டர்ஜி, “பாதுகாப்பு காரணமாகவும் போலி பாஸ்போர்ட்டுக்களை கண்டறியவும் தற்போது பாஸ்போர்ட்டில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.   இரண்டாம் பக்க்ட்த்ல் ஒரு செவ்வகத்தில் தாமரை மலரின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது.   அந்த படத்தை முன் பக்கத்தில் இருந்தும் பார்க்கமுடியும்.  அத்ஹ்டுட ஆங்கிலத்தில் அதே இடத்தில் இந்தியா என்னும் வார்த்தையும் உள்ளது.

இது மட்டுமின்றி இன்னும் 10 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.  அவை குறித்து வெளியில் சொல்லக் கூடாது.  இந்த அம்சங்கள் மூலம் போலி பாஸ்போர்ட்டுகள் கண்டறியப்படும்.    இந்தியாவின் தேசிய மலர் தாமரை ஆகும்.   எனவே இந்தியா என்னும் வார்த்தையுடன் தாமரை இடம் பெற்றுள்ளது.  இதைச் சர்ச்சைக்கு உள்ளாக்கத் தேவை இல்லை” என தெரிவித்துள்ளார்.